நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

01 December 2011

குர்ஆனை தினமும் ஓதலாம் வாருங்கள்.....



குர்ஆன் ஓதுதல் என்றதும் நமது மனத்திரையில் ஓடும் காட்சி.. சிறுவர்கள் புடைசூழ மதரஸாக்களில் ஹஜ்ரத்துகள் கையில் கம்போடு ஓதிக் கொடுக்கும் காட்சிதான். நம்மில் எத்தனையோ பேர் தம் குழந்தைகளை குர்ஆன் கற்க மதரஸாக்களுக்கு அனுப்புகிறோம். நம்மையும் நம் பெற்றோர்கள் அனுப்பினார்கள். காலங்கள் உருண்டோட.. நாம் மதரஸாக்களில் கற்ற குர்ஆனை சிறுகச் சிறுக மறந்துவிடுகின்றோம். வேறு சிலரோ குர்ஆன் ஓதத் தெரியாமலேயே அந்நியப்பட்டு விடுகின்றனர்.

நம்மில் பலரிடம் குர்ஆன் ஓதுங்கள் என்று கூறினால் நேரமில்லை என்றோ, சுத்தமில்லை என்றோ கூறி விலகி விடுகிறோம். சில பள்ளிகளில் இமாம் இல்லாத நேரம் இமாமத் செய்ய நடக்கும் போட்டா போட்டியே(?!) இதற்குச் சான்று. "இமாமத் செய்யுங்க பாய்" என்று சொன்னால், அந்தத் தகுதியெல்லாம் நம்மிடம் இல்லை என்று கூறக்கூடிய நம்மவர்கள், இறைமறையை கற்பதிலும், கற்ற மறையை ஓதுவதிலும் ஏன் பாராமுகம் காட்டுகிறார்கள். இறைமறையை கற்றல், ஓதுதல் போன்றவற்றின் சிறப்புகளை அவர்கள் அறிவார்களேயானால், நிச்சயமாக குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். 
                                                                              (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))

இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது. இன்னும் நன்மைத் தட்டு கனக்க காரணமாகிறது. மேலும் பல்வேறு நன்மைகளை நமக்கு கிடைக்கச் செய்கிறது.


நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). 
                                                 (திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))

தாழ்வு மனப்பான்மை வேண்டாம் குர்ஆனை கற்றுக் கொண்டிருக்கும் அல்லது அரைகுறையாய் ஓதத் தெரிந்த எத்தனையோ பேர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக, நமக்கு அவ்வளவாக ஓதவராது பாய்! என்று கூறுபவர்களாக இருக்கிறார்கள். நாம் தினமும் ஓதாத பட்சத்தில் அரைகுறையாக ஓதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நாம் அடிக்கடி ஓதி எப்படியாவது நம் ஓதுதலை திருத்திக் கொள்ள வேண்டும் என முயற்சித்து அடிக்கடி ஓதினால் நிச்சயமாக நாம் மிகப் பெரும் காரிகளாகலாம். மேலும் நமக்கு குர்ஆன் ஓத வராது என்ற தாழ்வு மனப்பான்மையை நீக்கி திக்கினாலும் பரவாயில்லை நான் முயற்சி செய்வேன் என்று உறுதி பூண வேண்டும்.

இன்று குர்ஆனை நல்ல முறையில் ஓதும் அத்தனை பேரும் ஆரம்ப காலத்தில் திக்கித் திக்கி ஓதியவர்கள்தான் என்பதையும் நம் மனதில் கொள்ள வேண்டும். ஆக திக்கித் திக்கி ஓதுவது குற்றமல்ல. நன்மைகளில் எந்த குறைபாட்டையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் நன்மைகள் தான் அதிகமாகக் கிடைக்கும்.

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. 

                                                       (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))

பொருளறிந்து உள்ளச்சத்தோடு ஓதுதல் நாம் இன்று குர்ஆனை நாம் பொருளறியாது சம்பிரதாயமாக ஓதி, இறந்தவர்களுக்கு பார்சல் செய்யும் பொருளாக மட்டுமே பாவித்து வருகிறோம்.

எந்த யாஸீன் சூராவை பார்சல் செய்வதற்கு பயன்படுத்துகிறோமோ அந்த யாஸீன் சூராவின் 70 ஆவது வசனத்தில்...

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்குத் (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. 

                                                                                                   (அல்-குர்ஆன் (36:70))

உயிரோடு இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவே இறைவன் குறிப்பிடுகின்றான். நாம் இதை பொருளறியாது சம்பிரதாயமாக ஓதினால் எப்படி இறைவனின் எச்சரிக்கையை புரிந்து கொள்ளமுடியும். எவ்வாறு நமக்கு அச்சம் ஏற்படும். மேலும் திருமறையில்..

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 

(அல்-குர்ஆன் 4:82)

என்று இறைவன் கேட்கிறான். எனவே பொருளறியாது ஓதும் பட்சத்தில் கருத்துக்கள் புரியாது. சிந்திக்கவும், ஆராய்ச்சி செய்யவும் இயலாது. இதே போல்...

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!  

                                                                                                      (அல்-குர்ஆன் 17:41)

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் ((இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? 

                                                                                                              (அல்-குர்ஆன் 47:24)

என்று வல்ல இறைவன் கூறுகின்றான். குர்ஆன் ஓதியதின் முழுப் பலனை நாம் பெற முடியாதவர்களாகி விடுகிறோம். இன்று எத்தனையோ மாற்று மத சகோதரர்கள் குர்ஆனை தனது தாய்மொழியில் பொருளறிந்து படித்து அதன் கருத்துக்களால் கவரப்பட்டும், கருணை நாயனின் நல்லுபதேசங்களையும், அறிவியல் உண்மைகளை ஆராய்ந்தும் இஸ்லாத்தின்பால் அணிவகுப்பதை அன்றும், இன்றும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

மேலும் திருக்குர்ஆனை நாம் பொருளறிந்து ஓதும்போது உள்ளச்சம் ஏற்படுகிறது. இறைவன் குர்ஆனில் கூறியுள்ள ஏவல், விலக்கல்களை புரிந்துகொண்டு நமது வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதயத்தில் சாந்தி ஏற்படுகிறது. அதே நேரத்தில் திருக்குர்ஆன் ஓதிய முழுமையான நன்மைகளையும் ஈட்டித்தருகிறது.

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகிறான்.    

                                                                   (முஸ்லிம்: உமர் பின் கத்தாப்(ரலி))

இந்த குர்ஆனின் பொருளறிந்து அதனை செயல்படுத்தும் சமுதாயத்தினரை இறைவன் நேர்வழிப்படுத்தி இம்மை மற்றும் மறுமை வாழ்வில் உயர்த்துகிறான். சஹாபாக்களின் வாழ்க்கையே இதற்குச் சான்று. அதேபோல பொருள் அறியாது சாஸ்டாங்கமாக ஓதி வரும் இன்றைய காலத்தில் உள்ள சமுதாயத்தின் நிலையை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். இன்று நாம் குர்ஆனை ஓதுகின்றோம், நமது மனதில் ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா?! பொருளறியாதவரையில் எவ்வாறு மாற்றங்களையும், செயல்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியும்? பொருளறிந்து ஓதும் போதும் சுவனத்தின் வர்ணணைகளைப் படிக்கின்ற போதும் நாம் இத்தகைய சுவனத்தை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் நமது உள்ளத்தில் ஏற்படுகிறது. அதேபோல் நரகத்தைப் பற்றி எச்சரிக்கையைப் படிக்கும் போது, இந்த உலக நெருப்பைவிட மறுமையில் வல்ல நாயன் ஏற்படுத்தியிருக்கும் நெருப்பு மிகக் கடுமையானது என்ற பயம் நம் மனதில் ஏற்பட்டு ஏவல், விலக்கல்களை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் மேலிடுகிறது.
 

இந்த உள்ளுணர்வு ஏற்பட்டதன் காரணமாகவே சஹாபா பெருமக்கள் வெற்றியடைந்தனர். அபூபக்கர்(ரலி) போன்றோர் தொழுகையில் குர்ஆனை ஓதும்போது அழுதுவிடக்கூடியவர்களாக இருந்தனர். இம்மையில் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்கள் குர்ஆனின் 4:41 ஆவது வசனத்தை ஓதும்போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதை புகாரி, முஸ்லிமில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் அறிவிப்பில் காணமுடிகிறது.

அழகிய குரலில் நிறுத்தி நிதானமாக ஓதுவது குர்ஆன் ஓதும் போது நிறுத்தி நிதானமாக, அவசரப்படாமல் ஓதவேண்டும். அவசரப்படுத்துவது ஷைத்தானின் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு, என்னுடைய இறைவன் எனக்கு அறிவிக்கிற உபதேசத்தை நான் வாசிக்கின்றேன் என்ற உள் அச்சத்தோடு ஓத வேண்டும். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு ஆயத்தாக நிறுத்தி ஓதுபவர்களாக இருந்தார்கள். இன்று நம் நிலை விசித்திரமானது. ரமலான் காலங்களில் எப்படியாவது 30 நாட்களில் குர்ஆனை முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வக்கோளாரில் போட்டி நிலவுகிறது. ஏன் தராவீஹ் தொழுகையில் கூட விரைவு வேக மௌலவிகள், ஹாபிழ்கள் வரவழைக்கப்பட்டு அதிவேகமான தொழுகைகள் நடைபெறுகின்றன. இன்னும் சில நண்பர்களுடன் உரையாடும் போது என் மகன் ரமலானில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடித்துவிட்டான் என்றெல்லாம் புகழாரம் சூடும் பெற்றோர்களையும், நண்பர்களையும் பார்க்கின்றோம். திருக்குர்ஆனை நிதானமாக ஓதவேண்டும். அதே நேரத்தில் நல்ல கிராஅத்துடன் ஓதுவது சாலச் சிறந்தது.

இஷாத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி ஸுராவை ஓதினார்கள். அவர்களைவிட அழகான, இனிமையான குரலை எங்குமே நான் கேட்டதில்லை. 

                                                         (புகாரி, முஸ்லிம்: பராவு பின் ஆஸிப் (ரலி))

நபி(ஸல்) அவர்கள் (அபூமூஸாவே) நீர் நபி தாவூது (அலை) அவர்களின் குடும்பத்தினரின் இசைக் கருவிகளில் ஒன்றைக் (இனிய குரலை) கொடுக்கப்பட்டுவிட்டீர். (அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)
குர்ஆனை மிக அழகிய இனிமையான குரலில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்) 

                                                     ((ஆதாரம் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர் : 
                                                                      அபூ மூஸா அல்அஷ்அரி(ரலி))

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்களிடம், நேற்றிரவு நான் உமது கிராஅத்தைக் கேட்பதை நீர் பார்த்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பீர் எனக் கூறினார்கள்.

குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - 

    (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி))


திருக்குர்ஆனை மனனம் செய்வது இன்று எத்தனையோ ஹாபிழ்கள் வாழ்கின்றனர். 6 வயது சிறுவர்கள் எல்லாம் முழுக் குர்ஆனையும் மனதில் சுமந்து நிற்பதைக் கண்டு நாம் பூரித்துவிடுகிறோம். இச்சூழலில் நம் நிலை என்ன? நாம் முஸ்லிம்களாகவே பிறந்துவிட்ட காரணத்தினால் எப்படியும் சுவர்க்கம் சென்றுவிடலாம் என்ற ஷைத்தானின் சூழ்ச்சியில் நல்ல அமல்கள் செய்வதில் பாராமுகம் காட்டுகிறோம். குறிப்பாக குர்ஆன் மனனம் செய்வது போன்றது.

குர்ஆனை ஓரளவு ஓதத் தெரிந்தவர்கள், தொழுகைளை பேணக்கூடியவர்கள் கூட குர்ஆன் மனனம் செய்வதில் பின் தங்கியே இருக்கின்றோம்! தினம் தினம் தொழுகின்றோம், ஆனால் சூரத்துன் நாஸ், சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக் போன்ற சிறிய சிறிய சூராக்களையே ஓதி தொழக்கூடிய எத்தனையோ தொழுகையாளிகளைக் காண்கிறோம். என்ன காரணம்? ஏன் இவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆர்வம் கொள்வதில்லை? என்பதை அல்லாஹ்வே அறிவான்.

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனை அடிக்கடி ஓதி அதனைப் பேணிப்பாதுகாத்து வாருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (திரும்பத் திரும்ப ஓதி அந்தக் குர்ஆனைப் பாதுகாக்க வில்லையென்றால்) அந்தக் குர்ஆன், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓட்டகை கட்டிலிருந்து விலகி விரண்டோடுவதைவிட மிக வேகமாக (உங்கள் உள்ளங்களிலிருந்து விலகி) விரண்டோடிவிடும். 

                                                      (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : 
                                                                 அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி))

எனவே திருக்குர்ஆன் நம் வேதம் என்பதை மனதில் கொண்டு அதனை நம் இதயத்தில் சுமந்தவர்களாக மாறவேண்டும். அப்போதுதான் திருக்குர்ஆன் நம் மனதில் குடி கொண்டு நமது உள்ளத்தை இறை அச்சமுள்ளதாக்கும்.

அன்புச் சகோதர சகோதரிகளே..
குர்ஆன் தெளிவான வேதம். இம்மை மற்றும் மறுமையில் வெற்றியடைய குர்ஆனைக் கற்றுணர்ந்து அதனை அழகிய முறையில் மனனம் செய்து சிறந்த காரிகளாகவும், ஹாபிழ்களாகவும் மாறுவதோடு அல்லாமல் கற்றவற்றைக் கொண்டு நல்ல அமல்கள் நம்வாழ்வில் நடைமுறைப்படுத்தியும், அதை நம் குடும்பத்திலும், மற்றவர்களுக்கும் எத்திவைத்து வாழ அல்லாஹ் அருள் புரிவானாக

                                                                                                           நன்றி: பொக்கிஷம் புதிது

28 November 2011

ஆயுட்காலத்தை அதிகரிக்க 7 வழிகள்




 அதிக காலம் வாழ யாருக்கு தான் ஆசைகள் இருக்காது.

ஆனால் அதற்கான வழிமுறைகளை மெற்கொள்வதில் தான் பலர் தோற்று போகின்றனர்.

ஆயுளை அதிகரிக்க கடினமாக உடற்பயற்சிகளை மேற்கொண்டு அதை ஒரு சில தினங்களிலே கைவிடுபவர்கள் மிகவும் ஏராளம்...

இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைகளை கடைபிடித்து பாருங்கள்... நம் உடல் நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவது நிச்சயம்.

  • உடல் எடை குறைப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிப்பது
  •  உணவில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்தல்
  •  புகை மற்றும் மதுபானங்களை முற்றிலுமாக நிறுத்துதல்
  • ஆரோக்கியமான உணவுகை உண்னுதல் (fast food உணவுகளை தவிர்த்தல்)
  • நீரிழிவு (சுகர்) நோயினை கட்டுபாட்டுக்கள் வைத்து இருத்தல்
  • சுறுசுறுப்பாக வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளல்
  • பழங்களை அதிகமாக எடுத்து கொள்ளல்

நாம் இப்படியாக நம் வாழ்க்கையில் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்து கொள்வதன் மூலம் நாம் அதிக காலம் வாழ்வதோடு, வாழும் காலத்தில் ஆரோக்கியமாக வாழலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதை நாமும் கடைபிடித்து ஆரோக்கியாக வாழ்வோமாக!!!



27 November 2011

பழைய காலத்து புதுச்சேரி எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...


     சுதந்திரத்துக்கு முன்பு புதுச்சேரி எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய  புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். 

 

நன்றி: கூகிள் சர்ச்

நீங்கள் இந்த அறிய புகைப்படங்களை பார்த்து விட்டு, உங்களுடைய கருத்துகளை பதிவிடுங்கள்.

நன்றி நண்பர்களே.....

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.....

முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.


thanks
இஸ்லாமிக் தாவா குழுமம்