நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

19 January 2012

பெண்ணுரிமை பற்றி



பெண்ணுரிமை பற்றி இந்த நூற்றாண்டில் பலர் பேசுகின்றனர். அவர்களின் பேச்சுகளில் மட்டுமே  அவர்றை காணமுடிகிறது. நிஜ வாழ்க்கையில் பெண்களை போதை பொருட்களாகவே பார்க்கின்றனர்.  ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு அழகிய உரிமைகளை கொடுத்து அதை நடை முறை படுத்தியும் இஸ்லாம் காண்பித்து இருக்கிறது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

பிறப்புரிமை


பெண்கள் பிறப்பதை கேவலமாக கருதிய அறியாமை காலத்தில் வெறும் போக பொருளாக பயன்படுத்தபட்ட மடமை காலத்தில் அவளும் இறைவனின் பிரஜை என்றும், அவளும் இப்பூமியில் வாழ தகுதியுடைய ஆத்மா என்றும் கூறி அவள் பிறக்கும் உரிமையை பெற்று தந்த உன்னதமான மார்க்கம் இஸ்லாம்.

'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். 

                                - திருக்குர்ஆன் 17: 31

விஞ்ஞானம் வளர்ந்த இவ்வுலகத்தில், பெண்சிசு கொலை செய்யும் பல நவீன மனிதர்களுக்கு இதுவே தக்க பதிலடியாகும்.

கல்வியுரிமை


பெண் பிறப்பதே கேவலமாக எண்ணிய காலத்தில் கல்வி கற்கும் உரிமை கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும்.

பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று கூறிய மடயர்களை ஒழித்து "சட்டங்கள் ஆழ்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று 20ம் நூற்றாண்டு கவிஞன் பாரதி சொல்லிவிட்டு போனார் . ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கல்வியை கற்பது ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை என்று உரிமையையும் கடமையாக வலியுறுத்திய செம்மல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், அந்த அறியாமை காலத்திலேயே சட்ட வல்லுனராக, மார்க்கம் கூறும் மேதையாக விளங்கிய பெண்மணி தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். எந்த அளவிற்கு என்றால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தெரியவில்லை என்ற பதிலை நான் கண்டதில்லை என்று அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

திருமண உரிமை


ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியத, இருமனம் இணையும் திருமணம் உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
 
'...அவர்களை திருமணம் விஷயத்தில் நிர்பந்திக்கூடாது..' 
                        - திருக்குர்ஆன்(17:31)

'நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.' 

                        - திருக்குர்ஆன்(17:31)

மகன் கற்ற கல்விக்கும், அவனது அழகுக்கும் வட்டியுடன் கணக்கு போட்டு பைசா விடாது வாங்கும் (வர தட்சணை கைக்கூலி) வர்க்கத்தை திருத்தவும், பெண்களின் உரிமையை நிலை நாட்டவுமே இறைவன் இவ்வசனத்தை இறக்கியுள்ளான்.

விவாகரத்து உரிமை


திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை வந்தால் அவனை விட்டு விலகவும் இஸ்லாம் உரிமையினை அளித்துள்ளது. ஒவ்வாத கணவனோடு ஒட்டி தான் வாழ வேண்டும் என்றோ, அவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கி தான் போக வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி 'ஹீலவள்' என்ற உரிமையை வழங்கியுள்ளது மார்க்கம்.

சொத்துரிமை


திருமணம் முடித்து கொடுத்த பின் பெண்ணை கைக்கழுவி விடும் சமுதாயத்தில் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்டும் உரிமையையும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.

'பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே'. 

                     - திருக்குர்ஆன் 4: 7

சம்பாதிக்கும் உரிமை


பெண் அவளுக்கு பாதுகாவலர் இல்லாத சமயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய அவள் சம்பாதித்துக் கொள்ளலாம். அவளுக்கு பொறுப்பாளர் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் சம்பாதிக்க செல்லலாம் என்ற சுதந்திர உரிமையை இஸ்லாம் கொடுத்து உள்ளது

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான் 

                        - (அல்குர்-ஆன் 4:32)
 

மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது.
 

பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.
                       - முஸ்லிம் (2972)

சாட்சியம் அளிக்கும் உரிமை


பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்நதவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.

'... (கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..'' 

                           - திருக்குர்ஆன் 2: 282

பர்தா 


இறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத மூடர்கள் பர்தாவை கண்டதும் இஸலாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். காம வெறியர்களின் பார்வையிலிருந்து பாதுகாக்கும் இந்த பாதுகாப்பு, உடலுக்கு மட்டும் போடவில்லை. பார்வைக்கு நடைக்கு மற்றும் உள்ள அனைத்திற்கும் தான். ஏனென்றால் பெண்மை என்ற மென்மை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். சந்தை மாடுகளை போல் அவிழ்த்து, காண்பவர் கண்களுக்கு விருந்து படைக்க அது ஒன்றும் கடையில் விற்கப்படும் காட்சி பொருள் அல்ல. கற்பை பாதுகாப்பது அடிமை தனமா? மேலே கூறிய எந்த உரிமையையும் பெண்களுக்கு கொடுக்காமல் பர்தாவை மட்டும் கொடுத்து மூலையில் முடக்கி உட்கார சொன்னால் தான் அடிமை தனம் எனலாம்.

'... நபியே..நீர் கூறுவீராக! மூஃமினான பெண்கள், தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்'. 

                           - திருக்குர்ஆன் 24: 31

 இப்படி பாதுகாப்புடன் அவள் ஆசிரியை பணி மட்டுமல்ல ஆகாயத்தை எட்டி பிடிக்கும் பணியையும் செய்யலாம்ஃ இதை விடுத்து அரை குறை ஆடையுடன் அரை கால் டவுசரும் போடும் உரிமையும் ஆ;ணகளை பொல் வெளியில் சுற்றி திரியும் உரிமையும் வேண்டும் என்பவர்களுக்கு பர்தா மட்டும் அல்ல, சொல்லப்படும் அனைத்து ஒழுக்க மாண்புகளும் உரிமை பறிப்பாக தான் தெரியும். விழா கோலம் பூண்டு உலா வரவும் உல்லாச பறவை போல் பறந்து காணும் கண்களுக்கெல்லாம் குளிர்ச்சி ஊட்டும் காட்சி பொருளாக இருக்க வேண்டும் என்ற உரிமை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலருக்கு இஸ்லாத்தில் மட்டும் அல்ல கலாச்சாரம் மிக்க எந்த நாட்டிலும் எந்தவொரு வீட்டிலும் இடமிருக்காது.


நன்றி: அனைத்து இஸ்லாமிய தளங்கள்


குறிப்பு: இந்த கட்டுரையில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்ள முயல்கிறேன். 

1 comments:

VANJOOR said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....