நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

10 January 2013

புகை உங்களுக்கு நண்பனா? படியுங்கள்...

புகை (சிகரெட்)வரலாறு: ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம்.

புகைப்பது உயிர்க்கு இறுதிபயக்கும் (Smoking is Injurious to Health) என நாம் வாங்கும் சிகரெட் அட்டைகளிலேயே விளம்பரப்படுத்தப்பட்டும், புகைப்பவர்கள் புகைத்து கொண்டு தான் உள்ளனர். சொல்லப்போனால் ஊதுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் உள்ளது. ஆனால் புகைப்பது தேவையற்ற வேண்டாட ஒரு கொடிய கெட்ட பழக்கம். இது என்றும் எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும்.
         "புகை நமக்கு பகை" அவை வெறும் ஏட்டளவில் தான்...
புகை! மனிதனுக்கு பகை! என்பது வெறும் ஏட்டளவில் உள்ள வாசகம் தான் மாறாக நடைமுறையில் நாம் பார்ப்போமேயானால்,அது மனிதனுக்கு நண்பனாகவே திகழ்கிறது. எந்த அளவுக்கு எனில் மனிதனின் ஆறாவது விரலாக புகையிலையை உள்ளடக்கிய அந்த சிகரெட் திகழ்கிறது. மனைவி இல்லாமலும் இருந்து விடுவேன் மயக்கமில்லாமல் [புகை] ஒரு வினாடி கூட இருக்கமுடியாது என்று சொல்லும் புகை பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மனிதனுக்கு மத்தியில் அது ஏற்ப்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், எந்த அளவுக்கு மனிதன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
படித்தவர்களிடம் இதன் தாக்கம் அதிகம்: பொதுவாகவே எழுத படிக்க தெரியாதவர்களிடம் தான் எந்த ஒரு தீய பழக்கமும் பரவும். காரணம் அதை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவு என்பதற்குதான். மாறாக படித்து பட்டம் வாங்கி கிழித்ததாக சொல்பவர்கள், தான் இந்த புகை பிடிக்கும் போதைக்கும்,புகையிலையின் போதைக்கும் அடிமையாகிவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிக்காத கிராமபுரத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள், என்று பாகுபாடு இல்லாமல் பெருகி வரும் இந்த போதை பழக்கத்தால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்,,,
                     "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லி"

புகையிலையில் நிகோடின், பென்சோ பைரீன் என இரு நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றை "உயிரைக் குடிக்கும் உயிர்கொல்லிகள்" எனலாம். நிறமற்றவை, தனித்த நிலையில் இவை கொடிய நஞ்சுகள்.

ஒரு துளி நிகோடின், ஒரு முயலின் மேல் பட்டால் அது நடுங்கும், அதிர்ச்சி கொள்ளும்; இரு சிகரெட்டுகளில் உள்ள நிகோடினை ஊசிமூலம் செலுத்தினால் மடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் ஊதினால், ஒரு வாரத்தில்  400 மில்லி கிராம் நிகோடினை உட்செலுத்தியதற்து சமம். உடனே மரணம் உண்டாகும். ஒருவர் ஒரு நாளைக்கு 200 சிகரெட்டுகள் குடித்தால், ஓர் ஆண்டில் 840 கன சென்டிமீட்டர் புகைத்தார் (Tobacco Tar) உட்கொண்டது ஆகும்.

புகையின் தீமைகள்:
  • சிகரெட்டுப் புதை உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல் தான்.
  • இதயத்தில் குருதிநாளங்களை நிகோடின் குறுகலடையச் செய்கிறது. மாரடைப்பிற்கு முக்கிய காரணமே நரம்புகள் குறுகுவதே. கார்பன்டைஆக்சைடும் குருதி நாளங்களைக் குறுக வைக்கிறது
  • புகைப்பவர்கட்கு வைட்டமின் 'சி' குறைகிறது. குறையவே குருதி நாளங்களில் கொலஸ்ட்ரால் கூடி அதன் வழியைக் குறுகச் செய்கிறது
  • புகைத்துப் புகைத்துச் சுவை மாறுவதால், செரிமானம் கெட்டு விடுகிறது
  • கொழுப்பு உணவினை உண்ணும் வேட்கை அதிகமாகிறது. அதன் விளைவு குருதிக் கொலஸ்ட்ரால் கூடி மாரடைப்புக்கு வழிகோலுகிறது
  •  போதைக்கு அடிமையானவர்களுக்கு அடுத்த அதிர்ச்ச்சி என்னவென்றால், ஆண்மையின்மை. புகையிலையில் உள்ள அந்த  [நிகோடின்] நச்சு தன்மை விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தை பாக்கியம் என்பது கேள்விக்குறியாக்கி விடுகிறது. இது கணவன் -மனைவி மத்தியில் கசப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.
  • புத்தி கூர்மையும் மங்கச்செய்கிறது இந்த புகை பழக்கம். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் புகைப்பவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாகவும், ஆரோக்கியமான மற்றும் நல்ல மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுவதாகவும் ஆய்வுகள் அறிவிக்கின்றன
  • புகையிலையில் உள்ள நிகோடின், பென்சோபைரின் போன்றவை புற்று நோய்க்கும் பாதை வகுக்கும்.
  • எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
புகையிலையில் அம்மோனியா, ஆல்டிஹைடு, பினால் போன்ற காரம் மிகுந்த பொருட்கள், ஆர்செனிக் எனும் நச்சுப் பொருள், கார்பன் மோனாக்சைடு என்னும் நச்சு வாயும், நிகோடின், பென்சோபைரின் போன்ற நஞ்சுகளும் உள்ளன. புகைக்கும்போது இவையெல்லாம் உள்ளே சென்று அதனதன் வேலையைக் காட்டி விடுகின்றன.

இந்த புகை பழக்கத்தினால் சிறிது சிறிதாக நம்மையே நாம் மாய்த்து வருகிறோம். இப்படி நம்மை நாமே மாய்த்துக் கொள்வது தற்கொலைக்கு சமமானது. விஷத்தை அருந்தி ஒரே அடியாக உயிர் துறப்பதற்கு பதிலாக இந்த பழக்கத்தினால் சிறிது சிறிதாக உயிர் துறந்து வருகிறோம் என்பது தான் உண்மை.

இவ்வளவு கொடிய விஷம் உள்ள சிகரெட்டை நாம் விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் புகைவது சிகரெட்டாக இருந்தாலும் எரிவது நாமாகத்தான் இருப்போம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....











0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....